@ *Gallellanews1st*
அமீரலியும், அப்துர் ரஹ்மானும் - அதிர்வு ஒரு அவதானம்
(பைஸர் அமான்)
கடந்த 5.7.2017 அன்று ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதிர்வு நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துல் றகுமான் அவர்களும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி அமீர் அலி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அதில் பரிமாறப்பட்ட சில கருத்துக்களும் அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் கருத்துக்களை வழி மொழிந்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீவிர ஆதரவாளர் ஹம்ஸா கலீல் மற்றும் சிலரும் முகநூலில் தெரிவித்திருந்த கருத்துக்களும் எனது அவதானமும்.
வசந்தம் வு.ஏ.யில் அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்படி இருவரும் பரஸ்பரம் தமது கட்சிகளின் தலைமைத்துவம் சம்பந்தமாக முற்குறிப்பு கூறி முடித்த பிற்பாடு ஊடகவியலாளர்கள் கேட்ட நேரடி கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதி அமைச்சர் அமீர்அலி அவர்கள் சொன்ன விடயங்கள்pன் சாராம்சம் என்னவென்றால்
“நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொண்டிருக்கும் கொள்கை கோட்பாடுகள் உண்மையில் சிறந்தவை, நல்லாட்சிப் பண்புகள் நிறைந்தவை, தலைமைத்துவப் பண்புகளுக்கு அது கொண்டிருக்கும் முன்னுதாரணம் சிறந்தது, அதன் தவிசாளர் அப்துல் றகுமான் நல்ல கல்விமான், அவர் என்னுடைய நண்பர் மட்டுமல்ல அவரை எனக்கு நன்றாக பிடிக்கும், அவரை முகம்மது நபியின் பிற்பாடு வந்த கிலாபத்துடைய ஆட்சித் தலைவர்கள் போன்று நான் இவரை நவீன கிலாபத்துடைய ஆட்சியின் தலைவர் என்றே செல்லமாக அழைப்பதுண்டு” என்றும் “ஆனால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொண்டிருக்கும் கொள்கை கோட்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. மக்களின் எதிர்பார்ப்பும் தேவைகளும் வேறுவிதமானவை. எனவே, தேர்தல் கால இலஞ்சம் அல்லது கொடுப்பனவு மற்றும் அபிவிருத்தி போன்றவற்றினூடாகத்தான் மக்களின் வாக்குகளை அரசியல் வாதிகள் பெற்றுக் கொள்ள முடியும். இவற்றை நீங்கள் செய்திருந்தால் உங்களையும் மக்கள் பாராளுமன்றம் அனுப்பியிருப்பார்கள்.” என்று தெரிவித்ததோடு “இனிமேலும் காலம் தாழ்த்தாது ஏனைய அரசியல்வாதிகள் போல் எவ்வழியிலேனும் பாராளுமன்றம் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள்” என்று ஒரு ஆலோசனையினையும் வழங்கினார்.
இக்கருத்துக்களை சரிகண்டு வழிமொழிந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தீவிர ஆதரவாளர் ஹம்ஸா கலீல் என்பவர் ஒரு படி மேலே சென்று “நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த 11 வருடகாலமாக மக்கள் முன் பேசிவரும் கொள்கை கோட்பாடுகள் மக்களிடம் புளித்துப்போய் விட்டன.” ஏன்று ஒரு கருத்தையும் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
தாங்கள் அல்லது தங்களின் தலைவர்கள் எப்படி மக்களை வைத்து தங்கள் அரசியல் பிழைப்பை நடாத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாகவே ஊடகங்களில் ஒப்புக் கொண்டதற்கு உண்மையில் இவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
இருந்தபோதிலும் மக்களை அவ்வாறு நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது என்பதையும் கடந்த 11 வருடங்களாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்வைத்துவரும் கொள்கை சார்ந்த அரசியலில் பாரிய வெற்றி கண்டுள்ளது என்பதையும் சில உதாரணங்களுடன் விளக்குவதற்று கடமைப்பட்டுள்ளேன்.
1. நடைமுறைச்சாத்தியமில்லாத கொள்கையா?
முஸ்லிம்களாகிய நாம் ஒரு கொள்கை சரி என்பதை மனதார ஏற்றுக் கொண்டோமானால் முதலில் அக்கொள்கையினை நாம் உறுதியாக கடைப்பிடிப்பதோடு அதனை மக்கள் முன்கொண்டு சேர்ப்பதற்கும் நம்மாலான பங்களிப்புக்களை செய்ய வேண்டும். மாறாக நமது பிழைப்புக்கும் வருமானத்திற்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றது என்பதனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்ற ஒரு விதண்டாவாதத்தை சொல்லி ஒரு முஸ்லிம் தப்பிக் கொள்ள முடியாது.
உதாரணமாக இஸ்லாம் சொல்லக் கூடிய பல விடயங்களை மாற்று கொள்கையுடவர்கள் அவ்வாறுதான் விமர்சிக்கின்றார்கள். வட்டியில்லாப் பொருளாதாரம், பலதாரமணம், ஹலால் உணவு மற்றும் ஆடைமுறை என்பன தற்காலத்திற்குப் பொருத்தமில்லாதவை என்பதுதான் பலருடைய வாதம். ஆனாலும் இஸ்லாம் சரி என்று ஒப்புக் கொள்ளும் நாம் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பாடு படுகின்றோமே தவிர இதுபோன்ற வியாக்கியானங்கள் பேசுவதில்லை.
அது தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு (வுNயு) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (துஏP) போன்ற கட்சிகள் முடியுமானவரை கொள்கை வாத அரசியல் செய்யும் போது அல்குர்ஆனை சுமந்த நாங்கள் நல்ல கொள்கைகள் நடைமுறைச் சாத்தியமில்லை என்பது மனமுரண்டான செயலாகும்.
அது மாத்திரமல்ல இக்கருத்தை தற்போது சொல்லும் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் கொள்கைவாத அரசியல் மூலமாகத்தான் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர்கள்.
2. தேர்தல் கால இலஞ்சம் மற்றும் அபிவிருத்தி வாக்குறுதிகளைத்தான் மக்கள் எதிர் பார்க்கிறார்களா?
பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆதரவாளர்களும் சொல்வது போல் ‘மக்கள் கொள்கைவாத அரசியலை விட அபிவிருத்தி அரசியல் மற்றும் தேர்தல் கால இலஞ்சம் மற்றும் கொடுப்பனவுகளைத்தான் எதிர் பார்க்கிறார்கள்’ என்ற கூற்று மிகவும் பிழையானது என்பதற்கு ஆதாரமாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வே இருக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அபிவிருத்திக்கும் தேர்தல் கால கொடுப்பனவுகளுக்கு மிகவும் பெயர்போன ஒருவர் என்றால் அது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என்றால் அது மிகையில்லை. பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆதரவாளர்கள் கூறுவதுபோல் அபிவிருத்தி மற்றும் தேர்தல் கால கொடுப்பனவுகளுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்றால் 25 வருட அரசியல் பலம் வாய்ந்த ஹிஸ்புல்லாஹ் தனது சொந்த மாவட்டத்தில் தோற்றிருக்கவே முடியாது. எனவே, மேற்படி கருத்தினை முன்வைத்தவர்கள் கொஞ்சம் இது பற்றியும் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் எதிர்பார்க்கும் தலைமுறை சென்றுவிட்டது. தற்போதைய தலைமுறையினர் பெரும்பாலும் படித்தவர்கள் சமுக வலைத்தளங்களுடன் மிகவும் தொடர்பு கொண்டவர்கள். அரசியல் வாதிகள் பாராளுமன்றத்திற்குள் என்ன பேசுகிறார்கள்? வெளியில் என்ன பேசுகிறார்கள்? நேற்று என்ன பேசினார்கள்? இன்று எப்படி பேசுகிறார்கள்? கடந்த தேர்தலில் இவர்களது நிலைப்பாடு என்ன? இன்றைய நிலைப்பாடு என்ன? இக்கட்டான காலகட்டங்களில் இவர்களது செயற்பாடு எப்படி இருக்கின்றது? தொலைநோக்கு சிந்தனை மற்றும் இவர்களின் சுயநலபோக்கு போன்ற பல்வேறு விடயங்களை ஆராய்ந்த பின்புதான் முடிவெடுக்கிறார்கள்.
3. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் 11 வருட பிரச்சாரம் தோல்வியடைந்ததா?
பெரும்பாலான வியாபாரிகளின் நிலைப்பாடு குறுகிய காலத்திற்குள் நாம் போட்ட முதலீட்டில் இலாபம் கண்டுவிட வேண்டும் என்பதுதான். அரசியலையும் ஒரு தொழிலாக செய்யக் கூடிய தற்கால அரசியல்வாதிகள் பலரும் அவ்வாறுதான் நினைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனைத்தான் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களும் பொறி. அப்துல் றகுமானுக்கு குறித்த அதிர்வு நிகழ்ச்சியில் ஒரு ஆலோசனையாகயும் முன்வைத்தார். அதாவது “குறித்த வயதுடன் பாராளுமன்றம் செல்ல வேண்டும் அவ்வாறு சென்றால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும்” என்று எப்படி ஒரு வியாபாரி சக வியாபாரிக்கு ஆலோசனை வழங்குவாரோ அவ்வாறுதான் அது அமைந்திருந்தது.
வெற்றி என்பது இரண்டு வகையில் கிடைக்கும்
1. நேரடியான வெற்றி 2. மறைமுகமான வெற்றி.
உண்மையில் நாம் 11 வருடங்களாக சொல்லிவருகின்ற கொள்கை கோட்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டு ஒருமித்து வாக்களித்து பாராளுமன்றம் சென்று இந்த சமுகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வர முடியுமாகவிருந்தால் அது உண்மையில் நேரடியான வெற்றி. அந்த சந்தர்ப்பம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு இதுவரை கிட்டவில்லை. இருந்தபோதிலும் மறைமுகமான வெற்றிகள் பலதையும் அக்கட்சி பெற்றிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதனை சில உதாரணங்கள் மூலமாக விளக்கினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை தௌஹீத் (ஏகத்துவப் பிரச்சாரம்) கொள்கைப் பிரச்சாரம் என்பது சுமார் 10 வருடங்களாக வீரியமாக நடைபெற்று வருகின்றது. இருந்தபோதிலும் குறித்த பிரச்சாரத்தின்வாயிலாக நேரடியாக சிலரை உள்ளீர்த்திருந்தாலும் பெரும்பாலான மக்களையும் ஜம்மியதுல் உலமா மற்றும் மார்க்க சம்பந்தமான அதிகாரம் பெற்ற பொது நிறுவனங்களையும் நேரடியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.
அதற்காக தௌஹீத் கொள்கைப் பிரச்சாரம் நமது பிரதேசத்தில் தோல்வி கண்டு விட்டது என்று சொல்ல முடியாது. தௌஹீதுக்கு எதிரானவர்கள் கூட விரும்பியோ விரும்பாமலோ பல பித்அத்தான (மார்க்கம் காட்டித்தராத நூன செயல்) தவிர்த்திருக்கிறார்கள். பல சுன்னத்துக்களை (நபிவழி) பின்பற்றுகிறார்கள்.
உதாரணமாக கத்தம், பாத்திகா, மௌலீது, தாயத்து, அஸ்ம் இஸ்மா மற்றும் இறந்தவர்களுக்கு செய்யக்கூடிய கல்கின் போன்ற பல பித்அத்துக்களை தவிர்த்திருப்பதோடு பெருநாள் கால திடல் தொழுகை போன்ற சில சுன்னத்துக்களையும் பின்பற்றுகிறார்கள். இவை அனைத்துமே கடந்த பல வருடங்களாக தௌஹீத் அமைப்புக்கள் செய்துவரும் பிரச்சாரத்திற்கு கிடைத்திருக்க கூடிய மறைமுகமான வெற்றி என்று சொன்னால் அது மிகையில்லை.
இதேபோல்தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தீவிர பிரச்சாரம் பல மறைமுகமான வெற்றிகளைத் தந்துள்ளது.
1. நல்லாட்சி பற்றிய பொதுவான சிந்தனை மற்றும் நல்லாட்சி என்ற சொற்பதம் அனைவர் வாயிலும் தவழச் செய்தமை
2. கூட்டுத் தலைமைத்துவம் (சூறா சபை) சம்பந்தமான சரியான பார்வை
3. அர்த்தமுள்ள அபிவிருத்தி (உ-ம்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கட்டுகின்ற பல்கலைக்கழக கல்லூரியும் நல்லாட்சி தத்துவத்தின் கல்விசார் பண்புகளை அவர் ஏற்றுக் கொண்டதன் ஒரு வெளிப்பாடு)
4. உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது சேகரிக்கும் குப்பை முகாமைத்துவம் ‘குப்பை முகாமைத்துவம் குசினிக்குள் இருந்து தொடங்கப்பட வேண்டும்’ என்ற நல்லாட்சி காட்டித்தந்த ஒரு சிறு வழிகாட்டல்
5. பசுமை நகர அபிவிருத்தி என்பதும் அதனை செய்ய உள்ளுராட்சி மன்றங்கள் முயற்சி செய்து கொண்டிருப்பதும் நல்லாட்சி அபிவிருத்திப் பண்புகளில் ஒன்று.
6. கல்வி வலுவூட்டல் வேலைத்திட்டத்தினூடாக பாரபட்சமின்றி வழங்கப்படும் இலவச அப்பியாசக் கொப்பி விநியோகத்திட்டத்தினை இன்று பலரும் கையிலெடுத்திருப்பதும் நல்லாட்சியின் மறைமுக வெற்றியாகும்.
7. திட்டமிடப்படாமல் அபிவிருத்திகளைச் செய்து விட்டு தற்போது ஒவ்வொன்றாக மீள்கட்டுமானம் செய்யப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு பல வழிகளிலும் மறைமுகமான வெற்றிகளை அடைந்திருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அதன் முதற்கட்ட நேரடி வெற்றியாக எந்தவொரு அரசியல் அதிகாரமுமில்லாமல் தமது இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக தனிச்சின்னத்தில் (இரட்டைக் கொடி) பதிவு செய்திருக்கின்றது. இது நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தினால் இன்றுவரை தேசியப்பட்டியலை இழுத்தடிப்புச் செய்துவரும் றஊப் ஹக்கீமிற்கும் இரண்டுஃமூன்று தசாப்தங்களாக ஒட்டுண்ணி அரசியல் செய்துவரும் பல அரசியல் வாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசியல் கட்சியாக தனிச்சின்னத்தில் பதிவு செய்திருப்பது கொஞ்சம் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருக்கலாம்.
எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாமல் சமுகம் சார் சிந்தனையுடன் மாத்திரம் உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்குரிய கூலி இவ்வுலகில் கிடைக்காவிட்டாலும் அதற்குரிய கணக்கெடுப்புக்கள் தீவிரமாக வல்ல இறைவனால் கண்கெடுக்கப்படும். அதில் அவன் எந்த மோசடியும் செய்யமாட்டான் என்ற அவனுடைய வாக்கிற்கு அமைவாக தொடர்ந்து உழைப்போம்.
‘உடன்பாடான விடயங்களில் ஒன்று படுங்கள்’ என்ற இறைவனின் கட்டளைக்கு அமைவாக ஒன்றுபட்டு செயல்படுவதற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தில் வந்து இணைந்து கொள்ளுமாறு இக்கட்டுரையூடாக நல்லுள்ளங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
நம் உள்ளங்களில் உள்ள நல்ல எண்ணங்களை வல்ல இறைவன் நிறைவேற்றி வைப்பானாக!