Thursday, June 22, 2017

'ஞானசார' நாடகமும் ஆதிக்க அரசியலின் எழுச்சியும்.

==••¥==••¥==••¥==••¥==•
"ஞானசார” நாடகமும் ஆதிக்க அரசியலின் எழுச்சியும்..!!
==••¥==••¥==••¥==••¥==•

ஹ்மான் அப்துல் அஸீஸ்
ஊடகவியலாளர்

மாட்டுத் திருடன், மாங்காய்த் திருடன், மணல் கொள்ளையடித்தவன் முதல் ஆளையாள் சட்டையைப் பிடித்தவன் கூட வருடக் கணக்கில் நீதிமன்றம் ஏறி இறங்கிக் கொண்டிருக்க, முழு நாடே பார்த்திருக்க கச்சிதமாக ஒரு பகற்காட்சி நேற்று காண்பிக்கப்பட்டது.

நல்லாட்சியில் எல்லாம் நல்லதே நடக்கும் என நம்பியோருக்கு ஏமாற்றம், எந்த ஆட்சியும் அரசியல் ரீதியாகத் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்யும் என ஏற்றுக்கொண்டோருக்கு சிறு அதிர்ச்சி, ஜனநாயகம் மலர்ந்து விட்டதென நம்பியோருக்கு பெரும் ஏமாற்றம்.

ஆனால், இவை கால சூழ்நிலையில் வெற்று உணர்ச்சிகளாக அடங்கிப் போய்விடும் என்பதே அரசியல் கணக்கு.

பிரதமர் நியமனம், பிரதம நீதியரசர் நியமனம், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் ஆகிய மூன்று முக்கிய விவகாரங்களில் இந்த நல்லாட்சி இதை விடச் சிறந்த காட்சியைக் காண்பித்திருந்த போதிலும் அதீத எதிர்பார்ப்பும், ஒரு கொடுங்கோல் ஆட்சியின் முடிவில் விடுதலை பெற்றதாக அன்று பொங்கியெழுந்த உணர்வுகளும் இவற்றை சரி வர எடை போட்டு எதிர்காலத்தை அளவிட மறுத்து நின்றது.

போக மாட்டேன் என்று சொன்ன டி.எம் ஜயரத்னவையும் மொஹான் பீரிசையும் மிக இலகுவாக வெளியேற்றிய நுணுக்கம் அரசியல் உணர்வில் மறைந்திருந்தது. அதிலும் பிரதம நீதியரசராக இருந்த, சட்டத்தைக் கரைத்துக் குடித்ததாகக் கருதியிருந்த மொஹான் பீரிசுக்கே புதுச் சட்டம் சொல்லிக் கொடுத்து உங்கள் நியமனமே செல்லுபடியாகாது என அவரை பிரதம நீதியரசர்கள் பட்டியலிலிருந்தே நீக்கியது நல்லாட்சி.

நாடாளுமன்றில் ஆசனங்களின் நிறம், மனம், குறை நிறைகளையும் நன்கறிந்த வாசுதேவ, விமல், தினேஷ், மஹிந்த, விமல், டியு குணசேகர போன்ற ஜாம்பவான்களுக்கும் கண்கட்டு வித்தை காட்டி சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கியது அதில் உச்ச கட்டம்.

சர்வாதிகாரியின் கீழ் இயங்கிப் பழகிய அவர்களால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோரும் கடிதத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவில்லாதவர்களாக்கி, ஒரு வகையில் முட்டாள்களாக்கிய விதமெல்லாம் எம் சமூகத்தால் நுணுக்கமாகப் பார்க்கப்படவில்லை.

எதிரியையே தமது ஆயுதமாக்கிக் கொள்ள கடந்த வருடம் பெப்ரவரியில் ஞானசாரவைத் தம் தேவைக்காகவும் பயன்படுத்த ஆரம்பித்த ஆட்சியாளர்கள் சிறு பிரச்சினைகளைத் தூக்கி வீசி பெரிய பிரச்சினையொன்றை உருவாக்க கடந்த வருடம் நவம்பர் மாதமே தூபமிட்டார்கள். அதன் பயனாக சிறு சிறு முகநூல் தேசியவாதிகளையெல்லாம் அடக்கி ஞானசாரவின் தலைமைத்துவத்தை எற்க வைத்து நேற்றோடு புத்தம் புது அங்கத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் அது முடிவல்ல, ஆரம்பம் என்பது இனி வரும் காலத்தில் நாம் உணர்ந்து கொள்ளப் போகும் உண்மையாகும்.

ஏனெனில், இதுவரை ஞானசாரவின் தனி மனித பிரச்சினையாக இருந்த விடயங்களில் பல இனி சிங்கள தேசத்தின் அடிப்படை உரிமையாக மாறும்.

அசிங்கமான பேச்சும் ஒழுக்கமற்ற நடத்தையும் கொண்ட ஞானசார அதனை அஸ்கிரிய பீடத்தில் கொண்டு சேர்ததது ஓரிரு நாளில் நடந்த பிரச்சினையன்று. ஜனநாயகத்தையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் இந்த ஆட்சியில் நம்பியோருக்கு விழுந்த பேரிடி!

இலங்கை பௌத்தர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஒரு பல்கலாச்சார நாடு எனும் அடிப்படையை மாற்றியமைக்க வேண்டும் எனும் எழுச்சி காலப்போக்கில் வெற்றியளிக்காது விடின் கூட சிறுபான்மையினர் மீதான ஆதிக்க அரசியலுக்கு மீண்டும் வித்திடப்பட்டுள்ளது.

அச்சம் கலந்த வாழ்விலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற மக்கள் நம்பிக்கை வீண் போனதின் விளைவு அரசியலில் பிரதிபலிக்கும் அளவுக்கு இது குறித்த விழிப்புணர்வு நம் மக்கள் மத்தியில் இருக்கிறதா என்பது விடை காண முடியாத கேள்வி. அது மாத்திரமன்றி, மாற்றுத் தெரிவை எங்கிருந்து பெறுவது என்பதறியாமல் தொடர்ச்சியாக இருக்கும் தெரிவில் சூழ்நிலை சுகம் காணும் வேட்பாளப் பெருமக்கள் தம் கோபத்தை எங்கனம் காட்டப் போகிறார்கள் என்பது இன்னொரு கேள்வி.

ஆனால், இவ்வாறான உணர்வுரீதியான சம்பவங்கள் பொதுவாக சில நாட்களில் மறந்து விடக் கூடியவை. தற்போது நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஆதிக்க அரசியலின் அடுத்த அங்கம் இன்னும் கொஞ்ச நாள் அடங்கியிருக்கும். ஆதலால் எல்லாம் சரியென அன்றாட வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ளப் போகும் அப்பாவி சமூகம் அடுத்த தடவை தன் உணர்வு காயப்படும் வரை இவற்றை நினைத்துப் பார்க்க மாட்டாது.

சூழ்நிலைக்கு எதிர்வினை காட்டுவதிலேயே தொடர்ந்தும் ஆர்வமுள்ள சமூகத்திடம் சொந்த அரசியல் நலனுக்கப்பால் தூரப்பார்வையுடனான விழிப்புணர்வை ஏற்படுத்த போராடும் தலைவர்கள் இல்லை. ஆதலால் உணர்வுகளை உயிரூட்டி வைத்திருக்கும் பொறுப்பை ஊடகங்கள், எழுத்தாளர்கள். சிந்தனையாளர்கள் சமூக சேவகர்கள் தானாகப் பெற்றுக்கொள்கிறார்கள்.

விழிப்புடன் அவதானிக்கவாவது தவறி வரும் பட்சத்தில், ஆரவாரமே இல்லாமல் விழக்கூடிய அடுத்த ‘அடி’ யின் வலி இன்னும் அதிகமாக இருக்கும்.

-Rahman Abdul Azeez

https://www.facebook.com/Gallellanews1st

No comments:

Post a Comment

ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் பிறந்த இருவர் திருமணம் செய்த ஆச்சரியம்.

*@Gallellanews1st* பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த ஆண் மற்றும் பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற...